Thursday, 24 October 2013

பதிவுலகில் ஒரு புதிய பறவை

                   சிலர் ஒவ்வொரு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் ஏற்றுக்கொண்டு அதை உடனடியாக செயல்படுத்தி ஓரிரு நாட்களில் அதை கரைத்து குடித்து விடுவார்கள் .ஆனால் நாம் அதற்கு நேர் எதிர் வகையை சேர்ந்த ரகம்  நாம் பணிபுரியும் இடத்தில்  கடைசியாக செல்போன்  ஏ .டி எம் கார்ட் இதை எல்லாம் வாங்குன பெருமை நமக்குதான் - அப்படின்னா பாத்துகங்களேன்.
.
                  இப்படிப்பட்ட சமயத்தில் தான் அடிக்கடி நூலகம் போய்  குறிப்பு எடுக்கறதுக்கு பதிலா கணினி வாங்கினா அதில விரல் நுனியிலேயே எல்லாத்தையும் தேடலாம் என்று கேள்விப்பட்டு  2009 ஜனவரிவாக்கில் ஒரு கணினி வாங்கினோம்                                                                                                                      
                     வாங்கிவிட்டோமே தவிர அதை பெருசா ஒன்னும் பயன்படுத்தவில்லை-  சரியா சொன்ன பயன்படுத்த தெரியலை என்பதுதான் உண்மை .  அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு ஓரளவு தட்டு தடுமாறி தேவையான விஷயங்களை  தேடி இணையத்தில எடுக்க கத்துக்கறதுக்குள்ள.... யப்பா போதும் போதும் என்று ஆகிவிட்டது.

                  இதற்கிடையில் நமக்குள்ளே எப்பவும் தூங்காமல் இருக்கும் வாசகர்  இணையத்துக்குள் அப்பப்போ நடமாடும்போது ஜெயமோகன் ,  எஸ்.ரா , அ . முத்துலிங்கம் போன்ற தளங்களில் உலவ துவங்க ....நம்ம வீட்டு கணினி  கொஞ்ச நாளில் ரொம்ப  பிசி ஆகிவிட்டது.அப்பகூட நாமளும் ஒரு ப்ளாக் தொடங்கவேண்டும் என்று நினைத்தது இல்லை.

                    இதிலே என்ன காமெடி என்றால் நாம் எழுத வேண்டும் என்று நான் விரும்பியதையும் விட ,நம்மால் நன்றாக எழுதமுடியும் என்று நம்பியதையும் விட  நாம் அடிக்கடி சந்திக்கும் இரண்டு பெண்கள் நம்மை தூண்டிவிட்டு கொண்டே இருந்தார்கள். அதிலயும் ஒரு பெண் "நான் சாகறத்துக்குள்ளே நீங்க எழுதின ஒரே ஒரு  புத்தகமாவது படித்துவிடுவேன் " என்று நிஜமாகவே சீரியஸாக  கூறுவார்.

                    நானும்  "சீக்கிரம் எழுதிருவோம் "என்று தள்ளிபோட்டுகொண்டே வந்தேன்.இதற்கு இடையில் சனிபகவான் தமிழ் இலக்கிய உலகம் மேல் ஏதோ  கோபம் கொண்டுவிட வில்லங்கம் தொடங்கியது.

                    ஒருநாள் வலைப்பூ  ஒன்றை பார்த்துகொண்டிருந்தபோது கிடைத்த ஒரு நூலை அப்படியே பிடித்துகொண்டு மேலே மேலே போக கடைசியில்  இப்போ  ஒரு கிட்டத்தட்ட பிரபல பதிவராக உள்ள ஒரு பால்ய நண்பரை  போய்  சேர்ந்தது.கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு பேசினோம்.இதில் என்ன ஜோக் என்றால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் வீடு வழியாகவே சுமார் ஒரு வருடம் வேலைக்கு போயிருக்கிறேன்.அப்போ எல்லாம் போய்  பேசியதில்லை.

                  மீண்டும் தொடர்பு ஏற்பட்டபின் சென்னை சென்று நான் அவரை பார்த்தேன். அதுமாதிரியே அவரும் குடும்பத்துடன் எங்க ஊருக்கு வந்தார்.இரண்டு நாட்கள்  பல இடங்களை சுற்றும்போது  பேசிய கதைகளை எல்லாம் கேட்டு அவரும்," கூடிய சீக்கிரம் நீ ஒரு ப்ளாக் போட்டுரு  தம்ப்பி !!!பதிவுலகத்துக்கு உன்னை மாதிரி நிறைய ஆட்கள் தேவை  " என்று ஒரு சீரியசான பிட்டை போட்டுவிட்டு போனார்.

                     சென்னை சென்றபின் அவ்வப்போது அவர்" என்னாச்சு ப்ளாக்?"என்று கேட்கறதும் - நான்" இதோ வர்ற திங்கள்கிழமை ஆரம்பிச்சிடலாம்- அன்னைக்குத்தான் நல்ல நாள் " என்று டபாய்ப்பதும் -----ஒரு கட்டத்தில் இது தேறாத கேஸ் என்று அவரே கேட்பதை நிறுத்திவிட்டார்.

                      என்றாலும் இன்று பதிவு என்று ஒண்ணு  எழுதுவதற்கு அவர்தான் காரணம் என்றால்  அது மிகையாகாது--என்ற கருத்தை இங்கே அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறேன்.

                      பதிவு எழுத துவங்கலாம் என்றால் முதல் பிரச்னை-  நமக்கு டைப்  அடிக்க வராது...சமீப காலம் வரை ஒரு விரல் கிருஷ்ணாராவாகத்தான் இருந்தேன். முதலில் இந்த பாலத்தை கடக்க வேண்டுமே!!! இங்கே இணையம் உதவிக்கு வந்தது.- typingweb  என்ற இணையதளத்தில் ஆன்லைன் டைப் வகுப்புகள் இலவசமாக கிடைக்க ஒரே மாதத்தில் ஓரளவு கௌரவமான வேகத்தில் டைப் அடிக்க முடிந்தது.

                      அடுத்த பிரச்சினை -- கணினி அறிவு ஓரளவு உண்டு என்றாலும்  ஒரு ப்ளாக் தொடங்கும் அளவுக்கு நமக்கு ஓடவில்லை...மீண்டும் இணையமே கைகொடுத்தது.--- அப்துல் பாஸித் அவர்களின் " பிளாக்கர் நண்பன் "உற்ற தோழனாய் கைகொடுத்தது.வரிக்கு வரி அவருடைய கட்டுரைகளை படித்து வடிவமைக்கப்பட்டுள்ள வலைப்பூ இது --என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்

                         பதிவுகளை எழுத துவங்கும் முன்பாக ----மேற்கண்ட எல்லாருக்கும் நன்றி தெரிவித்து வணங்ககடமைப்பட்டிருக்கிறேன்.

                        ஆகவே   நண்பர்களே !!!   தோழியரே!!!  இதோ உங்கள் நடுவே  ஒரு புதியவன்...நல்லதா எதாவது நாலு  எழுதலாம்னு வந்திருக்கேன்...இந்த பக்கத்தை புக்மார்க் பண்ணிக்கங்க...அடிக்கடி வாங்க ... கருத்து  சொல்லுங்க ... தப்பு இருந்தா சொல்லுங்க ...திருத்திக்க உதவியா இருக்கும்... இந்த கட்டுரைகள் பிடிச்சிருந்தா நாலு பேருக்கு சொல்லி படிக்க சொல்லுங்க...

மீண்டும் விரைவில் சந்திக்கலாம் ....                                                                                      அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது ....                                                                    .உங்கள் அன்பு      அட்சயன்....அட்சயன்....அட்சயன்........

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.அடிக்கடி வந்து, படித்து, பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துங்க...